Monday, February 27, 2017

லட்சியத் தம்பதியினர் லால் சலாம்! - கே.ஏ.தேவராஜன் ********************************** இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளையான தாஷ்கண்டு கிளையின் மொத்த உறுப்பினர்கள் ஏழுபேரில் இருவர் பெண்கள். அவர்களில் ஒருவர் ஈவ்லின்; அமெரிக்கப் பெண்; தோழர் எம்.என்.ராயின் துணைவியார்.எம்.என்.ராயுடன் மெக்சிகோ சென்று அங்கு முதலில் மெக்சிகோ சோஷலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி பின்னர் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியிலும் பணியாற்றியவர்.1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற 3வது கம்யூனிஸ்ட் அகிலத்தின் 2வது காங்கிரசில் எம்.என்.ராயுடன் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர்.மற்றொருவர் ரோசா; ரஷ்யப்பெண். தோழர் அபானி முகர்ஜியின் துணைவியார். அன்றைய சோவியத் யூனியனின் தாஷ்கண்டிற்கும், இந்தியாவின் பெஷாவாருக்கும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) இடையே போக்குவரத்து கடிதத் தொடர்புகளுக்கு முகர்ஜியுடன் இணைந்து பணியாற்றியவர்.இவர்கள் இருவரும் அன்றைக்கு இந்தியர் அல்லாத இந்தியப் பெண் கம்யூனிஸ்டுகள்.1917 ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்தியத் தம்பதியினரில் சிலர், காரல் மார்க்ஸ் - ஜென்னி, லெனின் - குரூப்ஸ்காயா, ஜூலியத் பூசிக் - அகுஸ்தினா பூசிக் முதலான லட்சியத் தம்பதியினரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அவர்களையே முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.அத்தகையோர் பட்டியல் நீளும், நீளும், நீண்டுகொண்டே போகும்.எடுத்துக்காட்டாக சிலர்கல்பனா - ஜோஷி: ஒன்றிணைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி. காந்திஜி - ஜோஷி கடிதங்கள் பிரபலமானவை.2வது உலகப்போரின் போது கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டைத் தேசத்துரோகம் என்று பழிசுமத்தி இந்திய ஆளும் வர்க்கம் கம்யூனிஸ்டுகளின் மீது வன்முறையை ஏவிவிட்டபோது ‘‘ நீங்கள் ஒரு கம்பை எடுத்தால் எங்களுடைய பத்துக் கம்புகள் பதிலடி கொடுக்கும் என எச்சரித்து எதிரிகளைப் பின்வாங்கச் செய்தவர். கல்பனா: இவர் ஒரு வங்கப் பெண்மணி. மாணவர் இயக்கப் போராளி; ஆயுதம் ஏந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி வீராங்கனை.ஆங்கிலேயர்கள் சிட்டகாங்கில் (தற்போது வங்கதேசம்) அமைத்திருந்த ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு கொள்ளை வழக்கில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட பதின்மூவரில் ஒருவர். அந்நாட்களில் கம்யூனிஸ்ட் குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தால் கல்பனா என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுவது வழக்கம்.கல்பனாவும் ஜோஷியும் திருமணம் செய்து கொண்டு லட்சியத் தம்பதிகளாயினர்.விமலா - ரணதிவே: கட்சியில் பி.டி.ஆர் என அழைக்கப்படும் பி.டி.ரணதிவே கட்சியின் பொதுச்செயலாளர். இவர் காலத்தில் கட்சி தடை செய்யப்பட்டது. தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு கட்சிப் பணியாற்றியவர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிஐடியு ஸ்தாபகத் தலைவர்.விமலா: 1946 பம்பாய் கப்பற்படை புரட்சியில் போராளிகளுக்குத் துணைபுரிந்தவர். மாதர் இயக்கப் போராளி.ரணதிவேயும் விமலாவும் திருமணம் செய்து கொண்டு லட்சியத் தம்பதிகளாயினர்.லைலா - சுந்தரய்யா: கட்சியில் பி.எஸ். என்று அழைக்கப்படும் பி.சுந்தரய்யா தெலுங்கானாப் போராட்டத் தளபதி. நிலப்பங்கீடு போராட்டத்தில் நிலப்பிரபு படைகளும், நிஜாம் மன்னர் படைகளும் சேர்ந்து தாக்கியபோது அதற்கு எதிராகத் துப்பாக்கிகளை கையாளுவதில் சிறந்த பயிற்சி பெற்றவர். பயிற்சி அளித்தவர். கட்சி இரண்டான பின்பு சிபிஎம்மின் முதல் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஹைதராபாத்தில் பி.எஸ்.பவன் என்று பெரிய நினைவாலயமும், பி.எஸ்.பூங்காவும் உயரமான பி.எஸ்.வெண்கலச் சிலையும் இன்றும் கம்பீரகமாகக் காட்சியளிக்கின்றன.லைலா: இவர் இஸ்லாமியப் பெண்மணி. சுந்தரய்யாவின் துணைவியார்.ஆயுதம் தாங்கிய போராளிகளாகச் செயல்பட்டதால் குழந்தை பிறப்பும், வளர்ப்பும் அதற்குத் தடையாகிவிடக்கூடாது என்பதற்காக அந்தக் காலத்திலேயே குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டவர்கள்.இவை அனைத்துமே நுனிப்புல் தகவல்களே. தோண்டினால் தோண்டத் தோண்ட இவர்களும், விழுதுகளும், விருப்பங்களும் நிறை நிறையவே தெரியவரும்.கம்யூனிச இயக்கத்திற்கு வாழ்க்கப்பட்ட இத்தகைய தியாகிகளின் நினைவுகள் என்றென்றும் நம் நெஞ்சங்களில் நீங்காது நிலைக்கட்டும்! லால் சலாம்!! http://epaper.theekkathir.org/