அம்பேத்கர் மையத்தில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் வெற்றி கோயம்புத்தூர், பிப்.28- கோவையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் மூன்று பேர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கமாக செயல்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூரில் பார்வையற்ற/பார்வை குன்றியவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தேசிய பார்வையற்றோர் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. அவர்களில் எட்டு பேர் ஏற்கனவே அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர்.அண்மையில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவில், வாணி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அம்பேத்கர் மைய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாயின. அதில் மொத்தமுள்ள 300 மதிப்பெண்களுக்கு 219 மதிப்பெண் களைப் பெற்று பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்புப் பிரிவில் 37வது இடத்தை மதிவாணன் பிடித்திருக்கிறார். இந்த சிறப்புப் பிரிவினருக்கு 50க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு அரசுப்பணி கிடைப்பது உறுதியாகியிருக்கிறது. பாரத ரிசர்வ் வங்கியில் உதவியாளர் நியமனத் தேர்வு நடந்தது. அதில் அம்பேத்கர் மையத்தில் பயின்ற ரம்யா தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் நியமனமாகப் போகிறவர்களில் ஒரு இடம் மட்டுமே பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த நிலையில், அந்த ஒரு இடத்தையும் அம்பேத்கர் மைய மாணவியே பெற்றிருக்கிறார்.தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர்கே.சாமுவேல்ராஜ், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.சாமிநாதன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் மற்றும் இணையத்தின் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.