Tuesday, February 28, 2017

கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்த சிறையும் ஊழல்வாதிகள் சந்திக்கும் சிறையும் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ************************************************உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது தியாகத்தால் எழுதப்பட்டது. கருத்தாலும் கரத்தாலும் பணியாற்றக்கூடிய உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி புதியஉலகத்தை, ஏற்றத் தாழ்வு இல்லாத சம நீதியும்சமூக நீதியும் கொண்ட புதிய சமூகத்தை சமைப்பதற்காக கம்யூனிஸ்ட்டுகள் அயர்வின்றி போராடி வருகிறார்கள்.இந்த நீண்ட நெடிய பயணத்தில் அவர்கள்எதிர்கொண்ட சித்ரவதைகள், அடக்குமுறைகள், துப்பாக்கிச்சூடுகள், தூக்குமேடைகள் போன்றவை எண்ணிலடங்கா, எழுத்திலடங்கா,தமிழகத்திலும் கடந்த 70 ஆண்டுகளில் விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்றுவரை கம்யூனிஸ்ட்டுகள் சந்திக்காத சிறைச்சாலைகள் கிடையாது. சென்னை ராஜதானியாக இருந்தபோதே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள். பி.சுந்தரய்யா, பி.சீனிவாசராவ், ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி, ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியன், ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத், வி.பி.சிந்தன், கே.ரமணி, ஜி.கோவிந்தராஜன், கே.முத்தையா, கே.பி.ஜானகியம்மாள், பாப்பாஉமாநாத், எம்.கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திக்காதசிறையே இல்லை. இன்றும் நம்மோடு வாழ்ந்துவழிகாட்டி வருகிற என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, கோ.வீரய்யன் போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள்.பொன்மலை துப்பாக்கிச்சூட்டில் மாண்டதியாகிகள், வெண்மணி தியாகிகள், சின்னியம்பாளையம் தியாகிகள், சேலம் சிறை தியாகிகள், சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டகளப்பால் குப்பு, மதுரை தியாகிகள் தூக்குமேடை பாலு, மாரி-மணவாளன், பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ஐ,சுப்பையா, தஞ்சை தியாகிகள் இரணியன், சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் என தியாக தீபங்களால் வழிநடத்தப்பட்டது செங்கொடி இயக்கம். வீராங்கனை லீலாவதி,இடுவாய் ரத்தினசாமி, நன்னிலம் நாவலன்,பள்ளிப்பாளையம் வேலுச்சாமி என மக்களுக்கான இயக்கத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து செங்கொடி இயக்கத்திற்கு உயிர்தந்த வீரர்கள், தீரர்கள் பட்டியல் நீண்டதுநெடியது. தனித்த வார்ப்பு கம்யூனிஸ்ட்டுகள் தனித்த வார்ப்புகள்என்பார் ஜோசப் ஸ்டாலின். பொதுவாழ்க்கையில் தூய்மையையும் நேர்மையையும் உயர்த்திப் பிடித்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் பொதுவுடைமைத் தலைவர்கள் எத்தனையோ பேர்,கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மாநிலமுதல்வர்களாக பணியாற்றிய இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, தசரத்தேவ், அச்சுதமேனன், இ.கே.நாயனார், வி.அச்சுதானந்தன் தற்போது முதல்வர்களாக உள்ள மாணிக் சர்க்கார், பினராயிவிஜயன் ஆகியோர் மீது அரசியல் எதிரிகள் கூட சுட்டுவிரல் நீட்டி குற்றம்சாட்டியது இல்லை. ஊழல்கறை படியாத தூய வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இதேபோல் அமைச்சர்களாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய கம்யூனிஸ்ட்டுகளும் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை நாடறியும்.கம்யூனிஸ்ட்டுகளை தனது பிறவி எதிரியாகக் கருதி எதிர்த்து வந்த மறைந்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி கூட கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.தமிழகத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்களாக இருந்தனர். ஆனால் இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன?தில்லியில் தமிழ்நாட்டுக்காரர்கள் என்றாலே கேலியாக சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுதோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி,வி.என்.சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவருக்கான தண்டனை வழங்கப்படவில்லை. மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக-வுக்கும் தகுதியில்லை ஊழலுக்கு எதிராக பேசும் அருகதை பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இல்லை. சர்க்காரியா கமிஷன் விசாரித்த ஊழல்துவங்கி தற்போது விசாரணை நடைபெற்றுவரும் அலைவரிசை கற்றை ஊழல் வரை திமுகவினருக்கும் நீண்ட நெடிய ஊழல் பட்டியல் உள்ளது.இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், தெலுங்குதேசம், பிஜூஜனதாதளம் என ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாத மாநில முதலாளித்துவ கட்சிகளே இல்லை. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு ஊழல்என்பது முதலாளித்துவ அமைப்பு முறையின்ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது.புகழ்பெற்ற அறிஞர் நோம்சாம்ஸ்கி வார்த்தைகளில் கூறுவதானால் குரோனி கேப்பிடலிசம் எனப்படும் சலுகை சார் முதலாளித்துவம் கார்ப்பரேட் வர்த்தகம் மேலும் மேலும்பணம் சேர்க்கத் தூண்டுகிறது. அந்தப் பணபலம் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. ஊழல் பணத்தை பயன்படுத்தி முதலாளிகள் ஆளும் அரசாங்கங்களை தங்களது செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டுவர முயல்கின்றனர். நமது நாட்டில் நடைபெற்ற அலைக்கற்றை ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல், பங்குச்சந்தை ஊழல், பொதுத்துறை பங்குகள் விற்பனை ஊழல் போன்றவையெல்லாம் சலுகை சார் முதலாளித்துவத்தின் அதாவது அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கூட்டு கொள்ளையின் விளைவுகளே ஆகும்.தமிழ்நாட்டில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்காக இருந்தாலும் சரி, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட், தாதுமணல்கொள்ளை போன்றவையும் ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள், பெரும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டு மோசடியே ஆகும்.1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் தான்தற்போது இறுதிதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களும் ஊழல் மலிந்தவையாகவே இருந்தன. தன்னை யாரும் எளிதில் நெருங்கமுடியாத வகையில் அவர் தன்னை மாற்றிக்கொண்டார். ஒரு பக்தக் கூட்டம் உருவானது. எவ்வளவு முறைகேடு செய்தாலும் மக்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கக் கூடிய சில சலுகைகளை அளித்தால் அடுத்தடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றுஅதிமுக கருதியது. திமுகவின் கருத்தோட்டமும் இதுவே. ஊழல் செய்து அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சேர்த்த பணம் மக்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம்.ஆனால், இந்தப் பணம் கறுப்புப்பணமாக எங்கேயோ சென்று பதுங்கிவிடுகிறது, கோடானுகோடி மக்கள் அன்றாட பிழைப்புக்கே பரிதவிக்கும் நிலையில் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊழலில் சம்பந்தப்பட்ட பணம் அரசின் கஜானாவிற்கு வந்திருந்தால்லட்சக்கணக்கான பள்ளிகளை துவக்கியிருக்கலாம். அரசு மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம். கிராமப்புற மக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்திருக்கலாம். ரேசன் கடைகளில் பொருட்கள் கட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்திருக்கலாம். ஆனால் மடைமாற்றம் செய்யப்படும் இந்தப் பணம் மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதிக்கப்பட்டது என்பதால்தான் மார்க்சிஸ்ட்டுகள் ஊழலை எதிர்க்கிறார்கள். அன்று நடந்த போராட்டங்கள் காங்கிரசை எதிர்த்து திமுக எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் செய்த அந்தக் காலத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், விலைவாசி உயர்விற்கு எதிராகவும் பல்வேறுபோராட்டக்களங்களை கண்டுள்ளது. அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் மக்களுக்காகப் போராடி சிறைசென்றுள்ளனர். அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை எதிர்த்துநடைபெற்ற போராட்டத்தில் ஆறு மாததண்டனை பெற்று அண்ணா சைதாப்பேட்டைகிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனக்கு சிறையில் ஏற்பட்ட அனுபவங்களை கைதி எண் 6342 என்ற தலைப்பில் காஞ்சி ஏட்டில் கட்டுரையாக எழுதி அது ஒருநூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.சிறையில் தனக்கு சிறப்புவசதி எதையும் அண்ணா கோரவில்லை. ஒரு நாள் அவரைக் காண அவரது சின்னம்மா சிறைக்கு வருகிறார்.இங்கு குளிப்பதற்கு வெந்நீர் தரப்படுகிறதா என்று சிறைக் காவலரை கேட்கிறார். அதற்கு அந்த சிறைக் காவலர் சாமர்த்தியமாக இங்கு எப்போதும் வெந்நீர் தான் குளிப்பதற்கு என்றுகூறுகிறார். இதைக் கேட்ட அவர் திருப்தியுடன் சென்றார் என்று அண்ணா எழுதியிருக்கிறார்.அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட திமுக-விலிருந்து கணக்குகேட்டு அதிமுக பிரிந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலாபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள எண் 9234. இவை வெறும் எண் மாற்றம் மட்டுமல்ல. தமிழக அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆண்டு வந்த திமுகவும் அதிமுகவும் ஊழல்கறைபடிந்ததாக மாற்றியுள்ளதன் அடையாளம் இது. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் அறம்சார்ந்த அரசியலின் வீழ்ச்சியையே காட்டுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது சொத்துக்களையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறது சசிகலா தலைமையிலான கூட்டம்.சிறைக்கு செல்லும்போது கூட தனது உறவினரை கட்சிக்கு பொறுப்பாக்கிவிட்டுச் செல்கிறார் சசிகலா. தாம் சிறையில் இருந்தாலும் தன்னுடைய பினாமி ஆட்சிதான் நடக்கவேண்டுமென்று நினைத்துத்தான் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்ததும் அவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வுசெய்ததும்ஆகும். ஊழலுக்காக தண்டிக்கப்பட்டாலும்வெளியில் தங்களின் ஊழல் தடையின்றி நடைபெறவேண்டும் என்று நினைக்கும் சுயநல அரசியல்தான் இது.தன்னுடைய பதவிக்கு ஆபத்து வராதவரை ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்யவில்லை. இப்போது கூட அவர் ஊழலைப் பற்றிஒன்றும் பேசுவதில்லை. சேகர் ரெட்டியின் கூட்டாளியான அவர் ஊழலைப் பற்றி எப்படி பேசமுடியும்.எதிர்க்கட்சியான திமுக எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றவெறியில் சட்டமன்றத்தையே சண்டைக்களமாக மாற்றுகிறது. ஊழலைப் பற்றி அவர்களாலும் பேச முடியாது. அவர்களையும்ஊழல் வழக்குகள் விரட்டிக்கொண்டுதானிருக்கின்றன. மக்களுக்காக, மக்களை நோக்கி மத்தியில் ஆட்சிஅதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று ஆலாய்ப்பறக்கிறது பாஜக. தன்னுடைய ஆளான ஆளுநரையும் அதற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.இந்தப் பின்னணியில் தமிழக மக்களின்வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனாதையாகநிற்கின்றன. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, தீவிரமடையும் நகர்ப்புற, கிராமப்புற வேலையின்மை, 100 நாள் வேலைத்திட்டம் திட்டமிட்டு சீரழிக்கப்படும் கொடுமை, ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, நீட் தேர்வு உட்பட உயர்கல்வித்துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொலைகள். கொடுமைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குஎதிரான கொடூரத் தாக்குதல்கள், வன்கொடுமைகள், பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிப்பது போன்ற இந்த பிரச்சனைகளால் முற்றுகை யிடப்படுகிறது தமிழக மக்களின் வாழ்க்கை.கழகங்களின் சுயநல அரசியலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பாஜகவை காலூன்றஅனுமதிக்க முடியாது என முழங்கி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்வைத்து மார்ச் 2 -ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மாபெரும்பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டுமானால் வளர்ச்சியின் பாதையில் நடத்திச் செல்ல வேண்டுமானால் இடதுசாரிக்கட்சிகள் முன்வைக்கும் மாற்றுப்பாதை ஒன்றே வழி என்பதை இந்த பிரச்சார இயக்கம் ஓங்கி உரைக்கும். http://epaper.theekkathir.org/