SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 14, 2017

சோவியத்தில் டாக்சி டிரைவரைக் கவர்ந்த திருக்குறள் ட தி.வரதராசன் ரஷ்ய நவம்பர் புரட்சியை ஓராண்டுக் காலம் கொண்டாடும் இவ்வேளையில், உலகில் ஆறிலொரு பகுதியாய்த் திகழ்ந்த அந்த மிகப் பிரம்மாண்டமான ஐக்கிய சோவியத் சோஷலிச குடியரசு (ருளுளுசு) தேசத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம். ஐரோப்பா கண்டத்தின் ஒரு பகுதியும் ஆசியா கண்டத்தின் ஒரு பகுதியுமாக இணைந்து ஒரே தேசமாக விளங்கி வாழ்வாங்கு வாழ்ந்த - புதிய ருஷ்யா என மகாகவிகள் பாரதியும் ரவீந்திரநாத் தாகூரும் போற்றிய சோவியத் நாடெனும் திருநாட்டை மீண்டும் ஒருமுறை நம் மனபீடத்தில் ஏற்றி நினைத்துப் பார்க்கிறோம்... உலகில் மனிதகுல வரலாற்றில் உழைப்பவர் அரசு முதல் துவக்கமாக அமைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ஆளுகை புரிந்த ஒப்புமையில்லா ஒரு வரலாற்றை மறக்க முடியுமா? இன்று அங்கே சோவியத் அரசு இல்லை தான். ஆனால், அந்த 75 ஆண்டுகள் என்பது எதிர்வரும் ஒருகாலத்தில் உலகமே சோஷலிச பூமியாக மலர்ந்திட காலம் நடத்திப்பார்த்த ஓர் ஒத்திகை என்பதை மறுக்க முடியுமா?போரற்ற - அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலற்ற உலக சமாதானத்தின் தூதுவனாகவும், இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் உற்ற நண்பனாகவும் விளங்கியதையும், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம், தேசப் பாதுகாப்பு எனப் பன்முக ஒத்துழைப்பும் பரிமாற்றமும் இந்திய - சோவியத் நாடுகளுக்கிடையே ஆத்மார்த்தமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்ததையும் - அந்த இனிய நாட்களை - இன்று மறக்க முடியுமா? இவற்றைப் போல இலக்கியத்துறையிலும் நாம் காணமுடியும்.பழங்கால இலக்கியங்கள் தொட்டு அண்மைக்கால இலக்கியங்கள் வரையிலும் உள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய இலக்கியங்கள் பலவும் பெரும் பதிப்புகளாக சோவியத் நாட்டில் வெளியிடப்பட்டதைப் போல உலகில் வேறு எந்த நாட்டிலும் வெளியிடப்பட்டது உண்டா?புஷ்கின், லியோ டால்ஸ்டாய், அலெக்ஸி டால்ஸ்டாய், மக்சிம் கார்க்கி, ஷோலக்கோவ், ஆன்டன் செக்காவ், மாயாகோவ்ஸ்கி முதலான இலக்கிய மேதைகளைப் பெற்ற ரஷ்ய தேசம் நம் இந்திய தேசத்தோடு கொண்டிருந்த கல்வி-கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தின் காரணமாக நமது பழங்காலத் தமிழ் இலக்கியங்களும், பிற இந்திய மொழிகளின் இலக்கியங்களும் சோவியத் ரஷ்யாவில் ஏராளமாய் வெளியிட்டுப் பிரபலப்படுத்தப்பட்டன. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ என மகாகவி பாரதி உரைத்த அந்தப் பெரும் புலவர்களின் படைப்புகள் ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து சோவியத் மக்களுக்கு வழங்கப்பட்டன. திருக்குறள் ரஷ்ய மொழியில் வசனநடையில் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு மூலவடிவத்திலேயே - ஈரடி குறள் வெண்பா வடிவத்திலேயே திருக்குறள் வெளியிடப்பட்டது. இப்ராகிமோவ் என்ற சோவியத் அறிஞர் திருக்குறளை செய்யுள் நடையில் மொழிபெயர்த்தார். சோவியத் மக்களைத் திருக்குறள் மிகவும் கவர்ந்தது. திருக்குறள் நூலை ஆர்வத்துடன் படித்த ஒரு டாக்சி டிரைவர் தம்முடன் அதுபற்றிப் பேசியதைத் தமிழறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் தமது சோவியத் பயணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.குற்றம்புரிந்த மன்னனை எதிர்த்து நேருக்குநேர் நின்று நீதியுரைத்த வீரப்பெண்மணி கண்ணகியின் காவியமாக இளங்கோவடிகள் படைத்த நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. அறிஞர் கிளாஷோவ் இக்காப்பியத்தை உரைநடையில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.1917 நவம்பரில் வெடித்த ரஷ்யப் புரட்சியை “ஆஹாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று உலகிலேயே முதன்முறையாக வாழ்த்தி வரவேற்றுப் பாடிய முதல்கவிஞன் என்ற முறையில் சோவியத் அறிஞர்களிடமும் மக்களிடமும் பாரதிக்குத் தனி மரியாதை உண்டு. டாக்டர் செம்பியன் ஜி. ரூதின் சோவியத் பல்கலைக் கழகங்களில் பாரதியின் படைப்புகள் பற்றிய விரிவுரைகளை நடைமுறைப்படுத்தினார். பாரதியின் பாடல்களை வெளியிடுவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். ரூதின் என்ற அந்த அறிஞர் தம் பெயரை செம்பியன் என்று தமிழில் வைத்துக்கொண்டு ஆற்றிய தமிழ்ப் பணி - தமிழ்த் தொண்டு தமிழ் அறிஞர்களாலும் கல்வியாளர்களாலும் இலக்கியவாதிகளாலும் மறக்க இயலாதது. செம்பியன் லெனின் கிராடு பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது கூட்டு உழைப்பில் 38 ஆயிரம் சொற்கள் கொண்ட தமிழ் - ரஷ்ய அகராதி உருவானது.சிமிர்நோவா என்ற அறிஞர் பாரதியின் தேசியப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, சக்திப் பாடல்கள் ஆகியவற்றை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பாரதி பாடல்கள் தொகுப்பு வெளிவந்த சில நாட்களிலேயே அத்தனைப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட முதல் கவிதைநூல் பாரதியின் கவிதை நூலே. டாக்டர் எம்.எஸ்.ஆந்திரனோவ், டாக்டர் வி.ஏ.மகரெங்கோ, டாக்டர் வி.பி. பூர்னிகா முதலான 12 சோவியத் அறிஞர்கள் மகாகவி பாரதியைப் பாராட்டி எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு 1982-இல் பாரதியின் பிறந்த தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சோவியத் தமிழறிஞர்களின் காணிக்கையாக வெளிவந்தது.பியாதிகோர்ஸ்கி என்ற சோவியத் அறிஞர் தமிழ்நாட்டுப் பழங்கதைகள் என்ற பெயரில் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் திருவிளையாடல் புராணம், சுந்தரர், மாணிக்கவாசகர், மணிமேகலை, கோவலன்-கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆகியோரைப் பற்றி எழுதியிருந்தார். ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலும் ரஷ்ய மொழியில் வெளிவந்தது. லெனின் கிராடு, மாஸ்கோ பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்கும் ரஷ்ய மாணவர்கள் பத்துப்பாட்டு, பெரியாழ்வார், மாணிக்கவாசகர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மு.வரதராசனார், புகழ்பெற்ற எழுத்தாளர்களான கல்கி, அகிலன் ஆகியோரின் படைப்புக்களைத் தங்கள் ஆய்வுக்கென எடுத்துக் கொண்டனர்.மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ரஷ்ய மாணவர்களுக்குத் தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் கற்றுத்தந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அல்ல; தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி! இவர் “ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட கவிதைகள்” என்ற ஒரு தொகுப்பை எழுதி வெளியிட்டார். இதில் மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணைப் பாடல்கள் இடம்பெற்றன. பழங்கால, இடைக்காலத் தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல, அண்மைக்காலத் தமிழ் இலக்கியங்களும் சோவியத் மக்களிடம் புகழ்பெற்று விளங்கின.புதுமைப்பித்தன். கு.அழகிரிசாமி, கி.வா.ஜகந்நாதன், ஜெயகாந்தன், தொ.மு.சி.ரகுநாதன், பி.எஸ்.ராமையா, லட்சுமி ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. புதுமைப்பித்தனின் 23 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ஒன்று ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. சோவியத் நாட்டில் வெளியிடப்பட்ட “நண்பர்களின் குரல்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் பாரதியார், ச.து.சு.யோகியார், ப.ஜீவானந்தம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.டாக்டர் ஆந்திரனோவ் எனும் சோவியத் அறிஞர் இந்திய மொழிகளைப் பற்றி 140 நூல்களும், ஆய்வுரைகளும் எழுதியுள்ளார். தற்கால, பழங்காலத் தமிழ்மொழி இலக்கணம் என்ற இவரது ஆய்வு நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1973-இல் முதல்பரிசு வழங்கிக் கௌரவித்தது. ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாயுடன் நமது மகாகவி ரவீந்திரநாத் தாகூரை ஒப்பிட்டு “இந்தியாவின் டால்ஸ்டாய்” என்று புகழ்ந்துரைத்தனர் ரஷ்ய மக்கள். 1919-ஆம் ஆண்டு வெஸ்ட்னிக் ஜிழ்னி என்ற ரஷ்யப் பத்திரிகையில் ட்ரோயனோவ்ஸ்கி என்ற அறிஞர் இந்தியாவின் டால்ஸ்டாய் என்ற தலைப்பில் தாகூரின் மனிதநேயம் குறித்து கட்டுரையொன்று எழுதியிருந்தார்.(இந்த இரு வெண்தாடி வேந்தர்களின் முகத்தோற்றத்தைப் பார்த்தால்கூட அப்படித்தான் சொல்லத் தோன்றும்!) சோவியத் எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுவந்த “சோவியத் லிட்டரேச்சர்” என்ற ஆங்கிலக் கட்டுரைகள் ஏட்டின் 1961 வது ஆண்டின் 5-வது தொகுப்பில் “ரவீந்திரநாத் தாகூரும் ரஷ்ய வாசகரும்” என்ற தலைப்பில் லியோனிட் காமாயுனோவ் எழுதிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. அதில் தாகூரின் வாழ்க்கையும் அவரது படைப்புகளும் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது.தாகூரின் நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி நூல் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டதுடன் அவரது புகழ் சோவியத் நாடெங்கும் பரவியது. தாகூரின் படைப்புகள் ஆங்கில மூலத்திலிருந்து மட்டுமல்ல, வங்காளி மூலத்திலிருந்தும் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டன. கிட்டத்தட்ட சோவியத் நாட்டின் அனைத்து மொழிகளிலும் தாகூரின் படைப்புகள் வெளியிடப்பட்டன. 1955 - 57 ஆம் ஆண்டுகளில் தாகூரின் படைப்புகள் எட்டுத் தொகுப்புகளும், அடுத்து 12 தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. சோவியத் நாட்டில் தாகூரின் நூல்கள் பல லட்சம் பிரதிகள் வெளியிடப்பட்டன. http://epaper.theekkathir.org/