This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 13, 2017
உ.பி. தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? பிரகாஷ் காரத் உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவு இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்கதிருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ள போதிலும் உ.பி. தேர்தல் முடிவு இந்திய அரசியல் திசைவழியில் மிகப்பெரிய மற்றும் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முதலாவதாக , இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் பாஜக அடைந்திருக்கும் மிகப்பெரிய வெற்றி அரசியல் வார்த்தைகளில் சொல்வதானால், வலதுசாரி தாக்குதல் ஆகும். 2014 மக்களவைத் தேர்தலில் துவங்கிய இந்த போக்கு தடையின்றி தொடர்ந்து வருகிறது. பாஜக பெற்றுள்ள வெற்றி வியப்பளிக்கக் கூடிய ஒன்றல்ல என்றபோதும், இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருப்பது என்பது எதிர்பாராத ஒன்று. மக்களவைத் தேர்தலில் 80 இடங்களில் 71 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதோடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 42.3சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. தற்போது, நான்கில் இருந்து ஐந்து சதவீத அளவிற்கு பாஜகவின் வாக்குகள் மாறியிருந்தபோதும், சட்டப்பேரவையில் அந்த கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஆனால், எதிர்பாராதது என்னவெனில், 2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜக தக்க வைத்துக் கொண்டிருப்பதாகும். அது பெற்றுள்ள வாக்கு சதவீதத்தில் மட்டுமே சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலத்தில் பாஜக தனது அரசியல் செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனினும் பஞ்சாப்பில் அகாலி தள பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது அழுத்தமாக வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியல் சூழலில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். 1970 களில் துவங்கி நாட்டில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சியின் இடத்தை பாஜக தகர்த்துள்ளது. நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளிடையே நிலவிய பெருமளவிலான ஏமாற்றம்தான் இத்தகைய முடிவுக்கு காரணமாகும். உ.பி.தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. பாஜக தோற்கடிக்கப்படவேண்டுமானால் பீகாரில் நிகழ்ந்தது போன்று அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. உ.பி.யில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்தபோதும், பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பது உ.பி.அனுபவத்தில் சாத்தியமான ஒன்றல்ல. பாஜக அல்லாத கட்சிகளிடையே தீர்க்க முடியாத முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றாக நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எதார்த்தத்திற்கு பொருந்தாத ஒன்று. பொதுமேடை மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே கூட்டணிகள் உருவாக முடியும்.உ.பி.தேர்தலின் போது, நரேந்திரமோடி விடுத்த அறைகூவலின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்பட்டமான வகுப்புவாத கோஷங்களை முன்வைத்தார். சுடுகாட்டிற்கும் இடுகாட்டிற்கும் இடையிலான வேறுபாடு குறித்து அவர் பேசியது, முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோடி - அமித்ஷா வகையறா பாணி பிரச்சாரமே ஆகும். ஆனால், இந்த மதவெறி நஞ்சு தேசிய வாதத்துடன் கலக்கப்பட்டது உ.பி. வாக்காளர்களின் பெரும்பகுதியினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜக- ஆர்எஸ்எஸ் வகையறாக்களினால் முன்நிறுத்தப்பட்ட ‘தேசிய வாதம் என்பது இந்துத்துவா மதவெறி மற்றும் தேசிய இனவெறியை அடிப்படையாகக் கொண்டதாகும். இது சாதிவேறுபாடுகளைக் கடந்து மக்களிடையே தேசிய உணர்வை’ கிளறி விட்டுள்ளது. தேசியவாதத்தின் பெயரால் தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலை முறியடிக்க மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளினால் இயலாது போயிற்று.மோடியின் மதவெறி அடிப்படையிலான தேசியவாதம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்கொண்டு முறியடிப்பதற்கான உண்மையான மாற்று உ.பி.யில் இல்லை. உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது நேரடியான தாக்குதலைத் தொடுத்திருந்தது. மக்களின் வாழ்நிலை, வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது. நகர்ப்புற ஏழை, எளிய மக்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துப் பகுதியினரும் பாதிக்கப்பட்டனர். ஆனால், பண நீக்க மதிப்புக்குறைப்பு என்பது பணக்காரர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் மோடியினால், பசப்ப முடிந்தது. இந்தப்பிரச்சாரத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவோ அவர்களை அணிதிரட்டி போராட வைக்கவோ எந்தவொரு முயற்சியும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.உ.பி.யை பொறுத்தவரை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இதை எதிர்த்து அறிக்கைகள் விடுவதோடும் , நாடாளுமன்றத்தில் போராடுவதோடும் தங்களை சுருக்கிக் கொண்டனர். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதற்கு இந்தக் கட்சிகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரிக் கட்சிகள் பலமாக உள்ள கேரளத்தில் பண நீக்க மதிப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக மிகப்பெரிய அளவிற்கு மக்கள் அணிதிரட்டப்பட்டு போராட்டக் களத்திற்கு கொண்டு வரப்பட்டதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.பாஜக - ஆர்எஸ்எஸ்க்கு எதிராக அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் தெளிவானதொரு மாற்று மேடைதான் இப்போது அவசியமாகும். இந்துத்துவா மதவெறிக்கு எதிராகவும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராகவும் செயல்படும் ஒருங்கிணைந்த அரசியல் மாற்று அவசியமாகும். உறுதியான, மதச்சார்பற்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்தின் மூலம் இந்து தேசிய வாதம் முறியடிக்கப்பட வேண்டும். உ.பி. மாநில வெற்றி ஆர்எஸ்எஸ் மற்றும் பரிவாரங்களின் வகுப்புவாத தாக்குதல்களை ஊக்கப்படுத்தும். பெருமுதலாளிகளின் ஆதரவுடன் நவீன தாராளமயமாக்கல் மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்தை கெட்டிப் படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் கூடுதலாகும்.இந்த தேர்தல் முடிவைத் தொடர்ந்து அதிகரிக்கும் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து, அனைத்துத் தளங்களிலும் ஒன்றுபட்ட இயக்கங்களை நடத்தி அதன் மூலம் சர்வாதிகாரத்தை முறியடிக்க வேண்டும். ஆனால், இதுமட்டும் போதாது. இடது, ஜனநாயக கண்ணோட்டத்துடன் மாற்று பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களை பெருந்திரளாக அணி திரட்டுவது மற்றும் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்தி இந்த மாற்று திட்டத்தை முன் கொண்டு செல்ல வேண்டும் . இது மட்டுமே மோடி மற்றும் பாஜகவுக்கு வலிமையான அரசியல் மாற்றாக அமைய முடியும்.நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லி பதிப்பு தமிழில் - மதுக்கூர் இராமலிங்கம் http://epaper.theekkathir.org/
Labels:
PRAKASH KARAT
